“Go Home Gota” என்ற ஒற்றைக் கோஷத்துடன் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் காலிமுகத்திடலை முற்றுகையிட்டு இலங்கை மக்கள் போராடி வருகின்றனர். இன மத பேதமின்றி, சிறுபான்மை பெரும்பான்மை பேதம் கடந்து, வர்க்க வேறுபாடுகள் மறந்து மக்களை நாட்டின் பொருளாதார நெருக்கடி ஒன்று சேர்த்திருக்கிறது. இலங்கை, சுதந்திரமடைந்ததன் பின்னால் முதற்தடவையாக தனது வெளிநாட்டு கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலையை (default) அறிவித்திருக்கிறது. மக்கள் எரிபொருள், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டினாலும், உணவுப்பொருட்களின் தாங்க முடியாத விலையேற்றத்தினாலும், ஏறத்தாழ 12 மணிநேர மின்வெட்டினாலும் விரக்தியுற்று வீதியில் போராடுகின்றார்கள்.
பணவீக்கம் இதுவரை காலமும் ஏற்பட்டிராத அளவுக்கு சுமார் 17.5 வீதத்திற்கு உயர்ந்திருக்கிறது. ஏறத்தாழ 80-100 ரூபா விற்றுவந்த ஒரு கிலோகிராம் அரிசி தற்போது 400-500 ரூபாவுக்கு உயர்ந்துள்ளது. 60 ரூபாவுக்கு வாங்கிய 250 கிராம் பால்மா பக்கட்டு சுமார் 250 ரூபா வரை உயர்ந்துள்ளது.
மிரிஹான ஆர்பாட்டத்தை தொடர்ந்து ஏப்ரல் 1ஆம் திகதி ஜனாதிபதி கோதபாய நாட்டில் அவசரகால நிலையை பிரப்பித்தார். எனினும் அதனை ஒரு வார காலத்துக்குள் மீளப்பெற வேண்டிய நிலையை நாடெங்கும் அதிகரித்த ஆர்பாட்டங்கள் உருவாக்கின. பெற்றோல், அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துக்கள் அனைத்திலும் பெரும்பகுதியை இலங்கை இறக்குமதி செய்தே வந்தது. அத்தியவசிய பொருட்களின் இறக்குமதிக்காக பெரும்பாலான நாடுகள் வெளிநாட்டு நாணயங்களை கையிருப்பாக வைத்திருக்கும். எனினும் இலங்கை தனது டோலர் கையிருப்புக்களில் பாரிய தட்டுப்பாட்டை எதிர்நோக்கியதால் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் பலந்த நெருக்கடியை சந்தித்து வருகிறது. அதனால் அத்தியவசியப் பொட்களுக்கான விலைவாசி வானைத் தொட்டுவிட்டது.
ராஜபக்ஷாக்களின் மோசடியான ஆட்சியும், நிதி மோசடியும், தூரநோக்கற்ற முறையில் பிற நாட்டுக் கடன்களுக்குள் மூழ்கியதும், தவறான பொருளாதார கையாள்கையும்தான் இந்த நிலைக்கு உடனடிக் காரணமாக பார்க்கப்படுவதால் அவர்களின் ஆட்சிக்கு எதிராக மக்கள் திரண்டிருப்பதை ஆச்சரியமாக பார்க்க வேண்டியதில்லை. எனினும் நாடு இந்த நிலைக்கு வந்தமைக்கு அடிப்படைக் காரணங்களை மக்கள் உணரத் தவறுவார்களானால் மக்கள் போராட்டங்களின் முடிவில் மீண்டும் ஏமாற்றங்களே காத்திருக்கும். ராஜபக்ஷாக்களின் ஆட்சிக்காலத்தில் உருவான சீனாவுடனான இலங்கையின் பொருளாதார உறவுகளே நெருக்கடியின் பின்னணியில் முக்கிய உந்துதலாக இருப்பதாக பலர் நம்புகின்றனர். அமெரிக்கா சீனாவின் இந்த யுக்தியை “கடன்-பொறி இராஜதந்திரம் – Debt Trap Diplomacy” என்று அழைக்கிறது. ஒரு நாட்டில் கடனளிப்பவரின் அரசியல் செல்வாக்கை அதிகரிக்க, கடனாளிக்கு திரும்பத்திரும்ப கடனின் தவணையை நீடித்தும், மேலதிக கடன்களை வழங்கியும் அவர்களை கடனில் மூழ்கடித்து அந்த நாடுகளை பொருளாதாரக் காலனியாக மாற்றும் திட்டமே இதுவாகும்.
எவ்வாறாயினும், 2020 இல் இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடனில் சுமார் 10 சதவீதம் மட்டுமே சீனாவிடமிருந்து பெற்ற கடன்களாகும். கடன்களின் மிகப் பெரிய பகுதி – சுமார் 30 சதவீதம் – (International Sovereign Bonds) சர்வதேச இறையாண்மை பத்திரங்களுக்காக செலுத்த வேண்டிய கடன்களாகும். உண்மையில் ஜப்பான் சீனாவை விட இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் அதிக பகுதியை அதாவது 11 சதவீதத்தை கொண்டுள்ளமை கவனிக்கத்தக்கது.
இலங்கையின் பொருளாதாரத்துக்கு இந்த நிலை எவ்வாறு ஏற்பட்டது?
1948 இல் பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரத்திற்குப் பின், இலங்கையின் விவசாயத் துறை தேயிலை, கோப்பி, இறப்பர் மற்றும் வாசணைத் திரவியங்கள் போன்ற ஏற்றுமதி சார்ந்த பயிர்களால் ஆதிக்கம் பெற்றிருந்தது. இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கு இந்தப் பயிர்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணியில் இருந்து வந்தது. அந்த பணம் நாட்டுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களை இறக்குமதி செய்ய பயன்படுத்தப்பட்டது.
பின் வந்த காலங்களில் சுதந்திர பொருளாதாரக் கொள்கை மற்றும் உலகமயமாக்கல் போன்ற காரணிகள் இந்நிலையை மாற்றி அமைத்தன. இலங்கை, ஆடை ஏற்றுமதி, சுற்றுலாத்துறை, இலங்கைக்குள் மத்திய கிழக்கு மற்றும் மேற்குலகில் பணியாற்றுகின்றவர்களிடமிருந்து கிடைக்கின்ற பணத்தின் மூலம் தனது அந்நிய செலாவணியை ஈட்டத்தொடங்கியது. எனவே ஏற்றுமதியில் ஏதேனும் சரிவு ஏற்பட்டாலோ, உலகளாவிய அனர்த்தங்கள் ஏற்பட்டாலோ அது நேரடியாக பொருளாதார அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அந்நியச் செலாவணி இருப்புக்களை பாரிய அழுத்தத்திற்கு உட்படுத்தியது. இந்த காரணத்திற்காக, இலங்கை அடிக்கடி பணஇருப்பு சமநிலை நெருக்கடியை (Balance of Payment Crisis) எதிர்கொண்டது. இந்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தியது சர்வதேச நாணய நிதியம். இலங்கை 1965 முதல், சர்வதேச நாணய நிதியத்தில் 16 முறை கடன்களைப் பெற்றுக் கொண்டது. இந்தக் கடன்கள் ஒவ்வொன்றும் இலங்கை கடனைப் பெற்றவுடன், அவர்களின் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும்;(Reduction of Budget deficit), இறுக்கமான பணக் கொள்கையைப் பேண வேண்டும், இலங்கை மக்களுக்கான உணவுக்கான அரசாங்க மானியங்களைக் குறைக்க வேண்டும், மற்றும் ஏற்றுமதியை சாத்தியப்படுத்துவதற்கு நாணயத்தின் மதிப்பைக் குறைக்க வேண்டும் என்ற கண்டிப்பான உடன்பாடுகளுடனேயே வழங்கப்பட்டன.
ஆனால் பொதுவாக நல்ல நிதிக் கொள்கையானது ஒரு நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக் காலங்களில், பொருளாதாரத்தில் ஊக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கங்கள் அதிக செலவு செய்ய வேண்டும் என்று சொன்னாலும் சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் அதனை இலங்கைக்கு சாத்தியமற்றதாக்கி விட்டது. இவ்வாறு நிரந்தரமான தீர்வுகள் இன்றி ஐஎம்எஃப் கடன்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. பொருளாதாரம் மேன்மேலும் நெருக்கடிக்குள் நுழைந்து நாடு கடனில் மூழ்கடிக்கப்பட்டது.
இலங்கைக்கு 2016 ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தின் கடைசி கடன் வழங்கப்பட்டது. நாடு 2016 முதல் 2019 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெற்றது. மேலும் இந்த காலகட்டத்தில் பொருளாதாரத்தின் ஆரோக்கியம் மோசமடைந்து பொருளாதார வளர்ச்சி, முதலீடுகள், சேமிப்புகள் மற்றும் வருவாய்கள் சரிந்து, கடன் சுமை அதிகரித்தது.
2019 இல் இரண்டு முக்கிய பொருளாதார அதிர்ச்சிகளுடன் ஏற்கனவே நிலவிய மோசமான நிலைமை படுமோசமாக நிலைக்குள் தள்ளப்பட்டது. முதலாவது அதிர்ச்சி, ராஜபக்ஷாக்கள் ஆட்சிக்கு வரும் நோக்குடன் திட்டமிடப்பட்டதாக தற்போது பரவலாக நம்பப்படும் 2019 ஏப்ரலில் நிகழ்ந்த ஈஸ்டர் தாக்குதல்கள். இதன்போது கொழும்பில் தேவாலயங்கள் மற்றும் சொகுசு ஹோட்டல்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த குண்டுவெடிப்புகள் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் செங்குத்தான சரிவுக்கு வழிவகுத்தன. சில அறிக்கைகள் 80 சதவீத வீழ்ச்சி என்று அந்தத் தாக்கத்தை கணிப்பிடுகின்றன. இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை அது நேரடியாக பாதித்தது. மேலும் இரண்டாவது அதிர்ச்சியாக, நாட்டு மக்களின் நலன்களை கருத்திற்கொள்வதற்கு பதிலாக தமது குறுகிய சுயநலக் காரணங்களுக்காக ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் வரி வகிதங்களில் பொருத்தமற்ற மாற்றங்களை செய்தமை. இந்த வரி விதிப்பு மாற்றங்களால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2 சதவீத வருவாயை இலங்கை சடுதியாக இழந்தது.
இந்த அவல நிலைக்கு அணி சேர்த்துபோல் மார்ச் 2020 இல், கொவிட்-19 தொற்றுநோய் இலங்கையைத் தாக்கி நிலவிய பொருளாதாரச் சரிவை மேலும் ஊக்கிரப்படுத்தியது. ஏப்ரல் 2021 இல், ராஜபக்சே அரசாங்கம் மற்றொரு கொடிய தவறைச் செய்தது. அன்னியச் செலாவணி கையிருப்பு வெளியேறுவதைத் தடுப்பதற்காக, அது இலங்கையை 100 சதவீத இயற்கை விவசாய நாடாக (100% Organic Farming) அறிவித்து அனைத்து உர இறக்குமதிகளையும் முற்றிலும் தடை செய்தது. இது நாட்டின் விவசாயத்துறையை பாரிய பின்னடைவுக்குள் தள்ளியதுடன், அரிசி போன்ற தானியங்களுக்கு கூட முழுமையாக இறக்குமதியில் தங்கியிருக்க வேண்டிய நிலையை தோற்றுவித்தது. நாட்டில் பஞ்சமும், பட்டினியும் உருவாவதை தடுக்க முடியாது என்று பலர் வெளிப்படையாகக் கருத்துச் சொல்லும் நிலை தோற்றியது. நவம்பர் 2021 இல் அரசாங்கத்தின் முரண்பாடான இக்கொள்கை பலந்த போராட்டங்களுக்கு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.
ஆனால் அன்னியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்தும் கடுமையான அழுத்தத்தின் கீழேயே இருந்தது. உரம் மீதான தடை காரணமாக தேயிலை மற்றும் ரப்பர் உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சியும் ஏற்றுமதி வருமானம் குறைவதற்கு வழிவகுத்தது. குறைந்த ஏற்றுமதி வருமானம் காரணமாக, உணவு இறக்குமதிக்கு போதியளவு டொலர்கள் இருப்பில் இல்லாததால் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது.
இறக்குமதியில் ஏற்பட்ட தடங்களால் உணவு மற்றும் பிற பொருட்கள் தட்டுபாட்டைச் சந்திக்க கேள்வி அதிகரித்து பொருட்களின் விலைகள் ஒவ்வொரு நாளும் அசுர வேகத்தில் உயரத் தொடங்கி விட்டது. பிப்ரவரி 2022 இல், பணவீக்கம் 17.5 ஆக உயர்ந்தது. நாட்டின் அனைத்து மக்களின் வயிற்றிலும், வாழ்வாதாரத்திலும் நேரடியாக அடி விழுந்தவுடன் மக்கள் அலை அலையான ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் எதிராக போர்க்கொடி தூக்க ஆரம்பித்து விட்டார்கள்.
தற்போதைய நெருக்கடியை சமாளிக்க இலங்கை அரசு மீண்டும் 17வது தடவையாக சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெறுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. அந்தக் கடன்களும் மிகக்கடுமையான புதிய நிபந்தனைகளுடன் வர இருக்கின்றன. அதன் விளைவாக பணமதிப்பிழப்பு நிதிக் கொள்கை (Deflationary Fiscal Policy) பின்பற்றப்படும், இது பொருளாதார மறுமலர்ச்சிக்கான வாய்ப்புகளை மேலும் மட்டுப்படுத்தி, இலங்கை மக்களின் துன்பங்களை அதிகப்படுத்துவதற்கு வழிகோலும்.
மேற்குலகால் வழிநடாத்தப்படும் ஐஎம்எஃப் போன்ற நிறுவனங்கள் அமெரிக்கா பிரித்தானிய போன்ற நாடுகளின் காலனித்துவக் கருவிகளாகும். அவற்றின் தலையீடுகளால் இலங்கை போன்ற வறிய நாடுகள் ஒருபோதும் சுபீட்சம் பெறப்போவதில்லை. மாறாக இலங்கை போன்ற நாடுகளின் வளங்களை மேற்குலக நலன்களுக்கும், அவர்களின் எஜமானர்களான பணமுதலைகளுக்கும் தாரைவார்க்கும் பாதையைத்தான் அவர்கள் காட்டுவார்கள். இலங்கையின் ஆட்சியாளர்களும், அவர்களை ஆட்சிக்கட்டிலுக்கு கொண்டுவருபர்களும் தமது வயிற்றை வளர்த்துக் கொள்ள மக்களை ஏமாற்றும் அரசியல் வித்தைக்காரர்கள் மாத்திரம்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இம்முறையும் புதிய நாடகம் ஒன்றுதான் அரங்கேற்றப்படலாம்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிரந்தரமானதும், முறைமை (System)s சார்ந்து புரையோடிப்போன பல கோளாறுகளால் உருவாக்காப்படுபவை. அவற்றை ஆட்சியாளர்களின் முகங்களை மாற்றியோ, பொருளாதாரக் கொள்கைகளில் மேலோட்டமான மாற்றங்களைச் செய்தோ சீர்திருத்த முடியாது. எமது வரலாற்றின் பெரும்பகுதி கடன்களுடன் வாழ்ந்த காலங்கள்தான். உலக நாடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் கடனாளி என்ற அடையாளத்துடன் இலங்கை இருந்து வந்திருந்தபோதிலும், எளிமையாக ஆரம்பித்த கடன்சுமை இன்று முழு நாட்டையும் திணரடித்துவிடும் பிரளயமாக உருவாகி விட்டமையே சமூகத்தின் அனைத்து சாராரையும் அது அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
இன்று இலங்கையில் தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடியின் அடிப்படை, வெறுமனவே பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக அது சுதந்திரத்தின் பின்னால் இதுவரை காலமும் நாட்டில் கடைபிடிக்கப்பட்ட அரசியல் கொள்கைகள், தீர்மானங்கள் மற்றும் வலிந்து உருவாக்கப்பட்ட பரித்தாளும் அரசியல் கலாசாரத்தின் விளைவாகும். பிரித்தானியா நாட்டுக்குள் விட்டுச் சென்ற ஜனநாயம் என்ற பெரும்பான்மையின் கொடுங்கொண்மையும், பேரினவாதமும், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் மீதான ஒடுக்குமுறையும், அதனைத் தொடர்ந்து வந்த சுமார் 30 வருட கால சிவில் யுத்தமும் நாட்டின் ஒருமித்த முன்னேற்றத்துக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பாரிய முட்டுக்கட்டையாக இருந்தன. தமது சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக முழு அளவிலான யுத்தத்தை பல தசாப்தங்களாக கொண்டு நடத்துவதற்கு மாத்திரம் பல பில்லியன் டொலர்களை விரயமாக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை நாடு எதிர்கொண்டது. 2009 இல் யுத்தம் முடிவுற்ற போது நாடு கடன் சுமையில் மூழ்கியிருந்தது. அதன் பின்னால் ராஜபக்ஷ அரசு தமது குறுகிய செல்வாக்குக்காக கையாண்ட முஸ்லிம் விரோத பிரத்தாளும் கொள்கைகளும், ராஜபக்ஷ சாம்ராஜ்ஜியத்தின் அளவிடமுடியாத அரச நிதிக் கொள்ளைகளும், மோசடிகளும் நாட்டை கடந்த ஒரு சதாப்பங்களாக அதலபாதாளத்துக்குள் தள்ளி விட்டன. எனவே இன்றைய பொருளாதார நெருக்கடி நேற்றையை தவறான வஞ்சகமாக தூரநோக்கற்ற அரசியல் நிலைப்பாடுகளின் விளைவு என்பதை நாம் புரிய வேண்டும்.
அல்லாஹ்(சுபு)வின் வழிகாட்டலை அமூல் செய்யாத நாடு இறுதியில் அழிவுப்பாதையில்தான் பயணிக்கும் என்பதை ஒரு முஸ்லிம் உணர வேண்டிய தருணங்கள் இவை. ஜனநாயகம் என்ற மேற்குலக மாயையான மேட்டுக்குடியினரின் மோசடியான கொடுங்கோண்மையை போற்றிக்கொண்டு வாழ்ந்ததன் விளைவுதான் இது. அல்லாஹ்(சுபு)விடம் முற்றிலும் தேவையற்றவனாக மனிதன் எத்தனை முறை தனது வாழ்வை, அது அரசியல் வாழ்வாக இருந்தாலும் சரி, பொருளாதார வாழ்வாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட வாழ்வாக இருந்தாலும் சரி, சமூக வாழ்வாக இருந்தாலும் சரி, தானே சட்டங்களும், கொள்கைகளும் வகுத்து வழிநடத்த முடியும் என்று நினைக்கின்ற தருணங்களில் அல்லாஹ்(சுபு) அவர்களை முகம் குப்பற வீழ்த்துகின்ற இத்தகைய வரலாறுகளில் இருந்து நாம் படிப்பினை பெற வேண்டும்.
இறுதியாக இலங்கை இன்று எதிர்நோக்கியிருக்கின்ற பொருளாதார சுனாமியில் மீன் பிடிக்கின்ற வகையில் வெளிநாட்டு சக்திகளும், உள்நாட்டு அரசியல் முகவர்களும் நாட்டை இன்னுமொரு அழிவுப்பாதைக்குள் செலுத்த தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ராஜபக்ஷாக்கள் நிச்சயம் விரட்டியடிக்கப்பட வேண்டியவர்கள்தான். ஆனால் அவர்களுடன் சேர்த்து, இலங்கையின் புரையோடிப்போன தீய அரசியல் கலாசாரமும்(Political Culture), அரசியல் முறைமையும்(Political System), அவற்றை வடிவமைக்கின்ற தவறான அரசியல் சித்தாத்தங்களும்(Political Ideology) சம அளவில் துடைத் தெறியப்பட வேண்டியவை.
இலங்கை இன்று சந்திக்கின்ற பாரிய பொருளாதார நெருக்கடி 2008 இல் முழு உலகும் சந்தித்தது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அதன் பாதிப்பு இன்றுவரை உலகை விட்டு அகலவில்லை. இன்று முதலாளித்துவ பொருளாதார ஒழுங்கு வறிய நாடுகளுக்கு மாத்திரமல்லாமல் வளர்ந்த நாடுகளைக்கூட ஸ்திரமற்ற நிலைக்கே தள்ளி உள்ளமை வெள்ளிடை மழை.
மாற்றீடு முஸ்லிம்களின் கைகளில் மாத்திரம்தான் உள்ளது. அது அண்ட சராசரங்களைக் படைத்துக் கட்டியாளும் ஒரே இறைவனான அல்லாஹ்(சுபு)வின் ஞானத்தின் வெளிப்பாடான இஸ்லாமிய சித்தாந்தத்தில் மாத்திரம் உள்ளது. அந்த சித்தாந்தம் இன்றும் எம் கைகளில்தான் உள்ளது, ஆனால் அதனை அமூல்படுத்தும் முறைமையான கிலாஃபத்தை நாம்தான் நிலைநாட்ட வேண்டும்.