இப்னு கைய்யும் (ரஹ்) தனது “வியாதிகளும் மருந்துகளும்” (The ailments and the medicines) எனும் நூலில் பின்வரும் குர் ஆன் வசனத்தை மேற்கோள் காட்டி பின்வருமாறு விளக்கமளிக்கிறார் :
(வானம், பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும், அர்ஷுடைய இறைவனாம் அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகவும் தூய்மையானவன். (அல்-குர்ஆன் 21:22)
படைப்புகளின் சீரான நிர்வாகத்தையும், ஒழுங்கமைப்பையையும் அவற்றின் குறையற்ற தன்மையையும் பற்றி ஆராயும் போது, படைத்தவன் ஒருவனாக இருப்பதே இதற்கு மூல காரணமாகும் என்பதை புரிந்துகொள்ளலாம்.
இப்னு கைய்யும் (ரஹ்) இந்த யதார்த்தத்தை மேற்கோள்காட்டி, உலகில் முஸ்லிம்கள் பல ஆட்சியாளர்களின் கீழ் இருப்பதை விட முஹம்மது (ஸல்) சுன்னாஹ்வின்படி ஒரு தலைவரின் கீழ் ஒன்றிணைவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்.
முஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சியாளர்களின் கீழ் இருந்து கொண்டு, அந்த ஆட்சியாளர்கள் ஒருவருக்கொருவர் கருத்திலும் கொள்கையிலும் வேறுபட்டு, நிலத்திற்காகவும், அதிகாரத்திற்காகவும் போட்டியிட்டு மோதும் சந்தர்ப்பத்தில்தான் இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம் உம்மாஹ்வின் வளங்களைச் சுரண்டி ஏப்பமிட சந்தர்ப்பம் உருவாகிறது.
இதுவே இன்று உலகில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அனைத்து குழப்பங்களுக்குமான மூல காரணமாகும். வரலாறும் இதற்கு சான்று பகர்கிறது. சிலுவைப் போர், தாதாரியர்களின் ஆக்கிரமிப்பு மற்றும் அண்டலூசியாவின் (இன்றைய இஸ்பெயின் பிரதேசம்) இழப்பு போன்ற வரலாற்று நிகழ்வுகளின் பின்னணிகளை எடுத்து ஆராய்ந்தாலும் இந்த உண்மை பலப்படும். எனவே முஸ்லிம் உம்மாஹ் இன்று ஒரு இஸ்லாமிய அரசின் கீழ் ஒன்றினையாமல், அதிகாரத்துக்காகவும், சுய லாபத்துக்காகவும் போட்டியிடும் ஆட்சியாளர்களின் கீழ் பந்தாடப்படுவது இஸ்லாத்தின் எதிரிகள் எம் முதுகில் ஏறி சவாரி செய்வதற்கு வழிவகுத்துள்ளது.